பல பகுதிகளை பாதிக்கக்கூடிய வெப்பமான வானிலை நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பம் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுகாதார பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவளை, நாளைய தினம் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க நாளை (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.