பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமிப்பதை இஸ்ரேல் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதோடு அது ஏற்படுத்தியுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி ஜனாதிபதி மலேசிய பிரதமர் அன்வர் இப்றாஹீமுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு 1967 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரமானதும் இறையாண்மை கொண்டதுமான பலஸ்தீன அரசை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளும் கைகோர்த்தால், காசாவில் நிலவும் மனிதாபிமான சவாலை சமாளிக்க முடியுமென நான் நம்புகிறேன்.
இந்நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை துருக்கிக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருபக்க வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட 11 ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.