தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முன்மொழிவை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பதவி நீக்க முன்மொழிவு சபாநாயகரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு, குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்படும் என்றும், அந்தக் குழுவால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தேசபந்து பொலிஸ் மா அதிபர் பதவியை வகிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் பொதுச் சேவையில் தொடரவும் முடியாது என்றும் அமைச்சர் கூறுகிறார்.
ஏப்ரல் 08 அல்லது 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்துக்குப் பிறகு சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் இதை நிறைவேற்ற முடியும் என்றும் இது தொடர்பாக ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
பிரதம நீதியரசரால் நியமிக்கப்படும் உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்குழுவின் தலைவராக இருப்பார் என்றும் பொலிஸ் ஆணைக்குழுத் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் பிரதிநிதிகளையும் கொண்டிருப்பர் என்றும் அமைச்சர் கூறுகிறார்.