முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
திருமண வயதை 18ஆக திருத்தம் மேற்கொள்ள முஸ்லிம் சமூகத்திலும் உடன்பாடு இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். என்றாலும் தற்போது காலத்துக்கு ஏற்றவகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ள நீண்டகாலமாக கலந்துரையாடி வருகிறோம்.
அதுதொடர்பான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்துக்கு தேவையான திருத்தங்களை கொண்டுவர தவறியமைக்கு நாங்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
திருத்தங்களை மேற்கொள்ளும் போது ஒருசில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
குறிப்பாக திருமண வயது தொடர்பில் நாட்டில் இருக்கும் பொதுவான சட்டம் 18 வயதாகும். முஸ்லிம் சமுகத்திலும் திருமண வயதை 18ஆக திருத்துவதற்கு உடன்பாடு இருக்கிறது.
அதேபோன்று விவாக சான்றிதழில் கையெழுத்திடுவது பெண்களின் உரிமையாகும். முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாக சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும். இந்த திருத்தத்தை மேற்கொள்ள சமூகத்தில் உடன்பாடு இருக்கிறது.
அதேபோன்று விவாகரத்து வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் இடம்பெற்றாலும் முஸ்லிம் விவாகரத்து வழக்குகள் காழி நீதிமன்றங்களிலே விசாரிக்கப்படுகின்றன.
அதனால் காழி நீதிமன்றங்களை வலுப்படுத்த வேண்டும். அத்துடன் காழி நீதிமன்ற விடயத்திலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக காழி நீதிமன்றங்களில் பெண்களும் அதில் நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதி, சட்டத்தரணிகள் தோன்றுவது போன்று காழி நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டும்.
மேலும் பராமரிப்பு செலவுகளை மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்றே பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காழி நீதிமன்றங்களில் அனுமதியை பெற்ற பின்னரே மாவட்ட நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்.
அதனால் முஸ்லிம் பெண்களும் பராமரிப்பு செலவுகளை பெற்றுக்கொள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு செல்ல முடியுமான வகையில் இதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.