இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இணைந்து திறக்கப்பட்ட வெப்பநிலை கட்டுப்பாட்டு களஞ்சியமான தம்புள்ளையின் விவசாய களஞ்சியம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
இந்த களஞ்சியத் திறப்பு விழா நாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்றும், இந்தத் திறப்பு விழா குறித்து தாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இந்த களஞ்சியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு விரிவான வணிகத் திட்டத்தையும் நாங்கள் உருவாக்கினோம். நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வியால் இந்த திட்டத்தை எங்களால் முடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இங்கே வேலையை முடிக்க உண்மையான விருப்பம் இல்லை. நாங்கள் உருவாக்கிய வணிகத் திட்டத்திலிருந்து இந்த அரசாங்கம் பயனடையும் என்றும் நம்பிக்கை வௌியிட்டார்.
தேவைப்படும்போது விவசாயிகளின் காய்கறி மற்றும் பழ அறுவடைகளை சேமித்து நிர்வகிக்க, 5,000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட நாட்டின் முதல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்பாட்டு விவசாய சேமிப்பு வளாகமாக இதை தாங்கள் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, “பிரபாஸ்வர” திட்டத்தின் மூலம் மத்திய மாகாணத்தை உள்ளடக்கிய கெப்பட்டிபொலவிலும், வடக்கு மாகாணத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாணத்திலும், தென் மாகாணத்தை உள்ளடக்கிய எம்பிலிப்பிட்டியவிலும் இதேபோன்ற விவசாய சேமிப்பு வளாகங்களை நிர்மாணிக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.
எனவே, அவற்றை செய்து முடிக்கும் ஆற்றல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.