அரசியல்உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.

ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும்.

இதன்படி, தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்கள் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள், அனைத்து பிரதேச செயலக அலுவலகங்கள், அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் இடங்களிலிருந்தும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்தும் இலவசமாகக் கிடைக்கும் மற்றும் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை ஒக்டோபர் 8ம் திகதி அல்லது அதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சிஅதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மழையுடனான காலநிலை தொடர்ந்தும்

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

ஜனாதிபதியை சந்திக்க மறுத்த – சி.வி.விக்கினேஸ்வரன்