இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக இரண்டு சகோதரர்கள் அடங்கலாக நான்கு பேருடன் வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகு இயந்திரக் கோளாறு மற்றும் கடல் சீற்றம் காரணமாக இலங்கை கடற்பரப்பை தாண்டி சர்வதேச கடல் பரப்பில் தத்தளிப்பதால் அவர்களை துரிதமாக மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு அவர்களது உறவினர்களால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து வாழைச்சேனை மீனவர் துறைமுக முகாமையாளர் விஜிதரனை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் படகு குறித்த மேலதிக முழு விபரங்களை கேட்டறிந்து கொண்டு உடனடியாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முழு விபரங்களை வழங்கினார்.
கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருக்கு குறித்த மீனவர்கள் தொடர்பான விபரங்களை வழங்கி அவர்களை துரிதமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நான்கு பேருடன் மீன்பிடிப்பதற்காக வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற IMUL A 398TLE எனும் அடையாள இலக்கத்தை கொண்ட குறித்த படகு தற்போது தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கடல் எல்லை பரப்பில் உதவியை நாடி தத்தளிப்பதால் அவர்களை தற்போதைய காலநிலை சீர்கேடு மற்றும் உணவு, குடிநீர் தேவை என்பவற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பாக மீட்பதற்கான மனிதாபிமான உதவிகளை இலங்கை மற்றும் இந்திய கடற்படை , கடலோர காவல் படை மற்றும் மீனவர்களிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் வேண்டிக் கொள்கிறார்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்