அரசியல்உள்நாடு

சகல ஊடகங்களுக்கும் நன்றி – சுகாதாரத் துறையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அநுராதபுரம் சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும் நோயாளர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) விசேட அறிவித்தலை விடுத்தே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது பாரதூரமான பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவம் இடம்பெற்று 36 மணித்தியாலங்களுக்குள் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

5 பொலிஸ் குழுக்கள் அவரை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில், நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர் தொடர்பான தகவல்களை வெளியிடாது அவற்றை பாதுகாத்தமைக்காக சகல ஊடகங்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அதேவேளை அரசாங்கம் என்ற வகையில் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள சுகாதாரத் துறையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கடந்த சில வருடங்களில் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளன. கொள்ளையிடும் சம்பவங்கள் அச்சுறுத்தல் சம்பவங்கள் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

கடந்த காலங்களில் இந்த வைத்தியசாலைக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் இது தொடர்பில் முறையான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.

அவர்கள் அப்போதே முறையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் தற்போது இந்த சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.

இந்த சம்பவத்தை அறிந்து நாம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் நிலையிலேயே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் நியாயமற்றது. அதனை அவர்கள் கைவிட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts

ஆதிவாசிகளின் குடும்பங்களின் பிள்ளைகளும் மந்தபோசன நிலைக்கு

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி – ரஞ்சன் ராமநாயக்க

editor