இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (16 ) முல்லைத்தீவு கள்ளப்பாடுபகுதியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,
“முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றன.
எனவே மிக விரைவாக அடுத்த வாரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வோம்.
அந்தவகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கையிருக்கின்றது” என்றார்.