கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“மோதர நிபுண” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பின்னர் பொலிஸார் அதே நாளில் தப்பி ஓடிய துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் கைது செய்து, துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மீட்டனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார், மட்டக்குளியில் உள்ள காக்கைத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றனர்.
அப்போது, பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்றதுடன், சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோசல லியனாராச்சிக்கு உள்ளூர் தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதர நிபுண என்று கூறிக் கொண்டு அழைப்பை மேற்கொண்ட நபர், “நீங்கள் கம்பஹாவில் போட்ட விளையாட்டை இங்கே போட முடியாது, நல்லதாகவா? அல்லது கெட்டதாகவா? இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, கொட்டாஞ்சேனை பொலிஸார் குறித்த கொலை மிரட்டல் தொடர்பில் புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பதிராஜாவிடம் நேற்று முன்வைத்த நிலையில், சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.