கடந்த (2025.03.31) திங்கட்கிழமை நெய்னாகாடு சாவாற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் இன்று (2025.04.01) பிற்பகல் வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராசா என்று உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நண்பருடன் நேற்று திங்கட்கிழமை (31) மாலை வேளையில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த மீனவரின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (01) செவ்வாய்க்கிழமை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காணாமல் போனவர் பிற்பகல் 3.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் செல்லராசா வெற்றி வேல் (பெரிய தம்பி) பெயருடைய செல்லப்பா வீதி, பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இதனை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
மீட்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்