ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபைக்கான மேயர் வேட்பாளர் எரான் விக்ரமரத்ன அல்ல என்று அக்கட்சியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறக்குவதற்கு கட்சியின் சார்பில் மூன்று முக்கிய உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களில் பொறுத்தமான ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.
எரான் விக்ரமரத்ன கட்சியின் கொழும்பு மேயர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று ஹிருணிகா பிரேமசந்திர நினைத்திருக்கக் கூடும். ஆனால் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.
எரான் விக்கிரமரத்னவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட்டு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று நிரோஷன் பாதுக்க மேலும் தெரிவித்தார்.
-எம்.மனோசித்ரா