அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி, எரிபொருள் ஓர்டர்களைப் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்தார்.
இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல், நாளை (04) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இது தொடர்பாக தமது சங்க உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த குசும் சந்தநாயக்க,
“எல்லா விநியோகஸ்தர்களும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி முன்புபோல் தொழிலை தொடர்ந்து நடத்துமாறு கூறியுள்ளோம்.
ஏனென்றால், நாங்கள் எடுத்த முடிவால் நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
எங்களுடன் யாரும் கலந்துரையாடல் நடத்தாததால்தான் இது இவ்வளவு தூரம் சென்றது.
இப்போது அவர்களும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர், இதை ஒருதலைப்பட்சமாக செய்ய முடியாது, இவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியே செய்ய வேண்டும் என்று.
அதனால், நாங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரை மதிக்கிறோம், அவரும் எங்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார், நாளை காலை 9 மணிக்கு வந்து சந்திப்பில் பங்கேற்குமாறு.
எனவே, நான் எல்லா விநியோகஸ்தர்களிடமும் ஒரு கோரிக்கை வைக்கிறேன், முடிந்தளவு விரைவாக முன்புபோல் தொழிலுக்கு திரும்பி, விநியோகப் பணிகளை முன்புபோல் தொடர்ந்து நடத்துமாறு” என்றார்.