இலங்கை தொழிலாளர் காங்ரஸூம் தொழிலாளர் தேசிய சங்கமும் இதுவரை காலமும் மலையக மக்களுக்கு குரல் கொடுத்த ஒரு அமைப்பு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் செனன் கே.எம். தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (09) சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன். இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் பிரதி பொதுச்செயலாளர் கல்யாணகுமார் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், கடந்த காலங்களிலும் மக்களுக்காகவே நாங்கள் இருதரப்பினரும் முரண்பட்டு கொண்டோம். தேசிய கட்சிகளுக்கு கட்டுப்பாடு உள்ளது.
அதனை மீறி செயற்பட முடியாது. நாமும் இலங்கை தொழிலாளர் காங்ரஸூம் மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் புதிதாக வந்த கட்சிகள் மக்களுக்கு எதுவும் செய்ததில்லை.
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதற்கு கலந்துரையாடி கொண்டிருக்கின்றோம்.
வெளி மாவட்டங்களில் தனித்து போட்டியிட பேசி கொண்டு இருக்கின்றோம். எமது கட்சியில் எவ்வித பிளவுகளும் இல்லை.
நான் இராதகிருஷ்ணன் மற்றும் மனோகணேசன் ஆகியோர் இணைந்து தான் செயற்படுவோம்.
மலையகத்தை பொருத்தவரையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவே பேசி வருகிறோம். எனக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் சொந்த பிரச்சினைகள் எதுவும் கிடையாது.
எமது ஆட்சி காலத்தில் காணி உரிமை முதல் காணி உறுதிப்பத்திரம் வரை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா பெற்றுதருவதாக ரணில் விக்ரமசிங்க கூறி அது கிடைக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் சம்பள பிரச்சினை இழுபறி நிலையில் உள்ளது. ஆகையால் தான் எமது நிலைப்பாடு பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே எமது நிலைப்படாக உள்ளது.
பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற தூரபிரதேசங்களில் உள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் மிக தொலைவிலேயே பிரதேச செயலகங்கள் காணப்பட்டது. அதனை இலகுபடுத்துவதற்காகவே நாம் எமது அரசாங்கத்தில் பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளையும் அதிகரித்தோம்.
இந்த மக்கள் பிரதேச சபையினை கைபற்றுவதற்காக எமக்கு வாய்பினை வழங்கவில்லை. ஆனால் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளார்கள் இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
-சதீஸ்குமார்