அரசியல்உள்நாடு

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பிரதமர் ஹரிணி வாக்குறுதி

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் (26) கோட்டே அங்கம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டதுடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில உட்பட பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசு தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் ஊடக பிரதானிகளும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டமையும் இதில் விசேட அம்சமாகும்.

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கமானது மூன்றாவது தடவையாகவும் இந்த சிநேகபூர்வ ஒன்றுகூடலையும் கிரிக்கெட் போட்டியையும் நடாத்துகின்றது.

அத்துடன் கொழும்பு ஊடகவியலாளர்களின் நலன்புரி சேவைகளை மேம்படுத்தவே வருடாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்படுவதோடு இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், எமது தமிழ் ஊடகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி “சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்திரகாசன் ஞான பிரசாந்தனும்” கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆரம்ப நிகழ்விற்கு வருகை தந்த பிரதமர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோர் கொழும்பு ஊடகவியலாளர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக தமது உரைகளில் தெரிவித்திருந்தார்கள்…

அத்தோடு ஏனைய விருந்தினர்களும் கொழும்பு ஊடகவியலாளர்களின் சேவையை பாராட்டி தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்…

தொடர்ந்து நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கொழும்பு ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

கோட்டே அங்கம்பிட்டிய விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு ஊடகவியலாளர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சஞ்சீவ கால்லகே தலைமையிலான கொழும்பு ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

இரண்டாம் இடத்தை கொழும்பு ஈகிள்ஸ் அணி பெற்றுக் கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரைடர்ஸ் அணி 3 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பெற்றது

பதில் இன்னிங்ஸை விளையாடிய கொழும்பு ஈகிள்ஸ் அணியால் 22 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. அதன்படி கொழும்பு ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது.

இந்த சுற்றுப் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக நுவான் யசங்க தெரிவானதோடு பிரதீப் விக்ரமசிங்க சிறந்த துடுப்பாட்டக்காரராக தெரிவானார். மேலும் போட்டித் தொடரின் சிறந்த வீரராக உதித மகேஷ் தெரிவானார்.

பரிசளிப்பு வைபவத்தின் சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதி சபாநாயகரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான திலங்க சுமதிபால கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்ததுடன், மேலும் பல சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிசில்கள் வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு

களுத்துறை மாவட்டத்தின் மற்றுமொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கம்

இன்று இதுவரை 502 கொரோனா நோயாளர்கள்