உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொய் மற்றும் போலியான வாக்குறுதிகளுக்கு நாட்டு மக்கள் இனி கவனம் செலுத்த மாட்டார்களென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டுக்கு யார் சேவையாற்றியது, யார் அரச சொத்துக்களுக்கு தீ வைத்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
மக்கள் விடுதலை முன்னணி மக்கள் மத்தியில் 75 ஆண்டுகால அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, வெறுப்பினை மாத்திரம் முன்னிலைப்படுத்தி தேர்தலில் வெற்றிப் பெற்றது.
மக்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக் எதிரானதாகவே திரும்பியுள்ளன. போலியான வாக்குறுதிகளினால் தாம் ஏமாற்றமடைந்துள்ளதை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
வெறுப்பினை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முடியும், ஆனால் சிறந்த முறையில் முன்கொண்டு செல்ல முடியாது என்பதை அரசாங்கம் தற்போது அறிந்துக் கொண்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சகல மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளோம். 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களில் அமோக வெற்றிப்பெற்றதை போன்று இம்முறையும் தேர்தலில் அமோக வெற்றிப்பெறுவோம். பெருமளவிலான உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றுவோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போலியான குற்றச்சாட்டுக்களையும், வாக்குறுதிகளையும் தாராளமாக முன்வைப்பார். ஆனால் அவர் சிறந்த செயல்வீரரல்ல. அரச நிர்வாக கட்டமைப்பு குறித்து அவர் பலவிடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
-இராஜதுரை ஹஷான்