ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார்.
இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார்.
எதிர்கால நோக்கிலான பிரவேசங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் கருத்தாடலை ஏற்படுத்த உலகத் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துவதே உலகத் தலைவர்கள் மாநாட்டில் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் மனித சமூகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புகள் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்து பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது.
இதில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000 ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பும் இதன்போது நடைபெறவுள்ளதுடன், அதனூடாக இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயிக் மொஹமட் பின் ரஷீட் அல் மக்டூமையும் சந்திக்கவுள்ளார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணியில் உள்ள உலக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.
வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரும் இந் விஜயத்தில் இணைந்துள்ளனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு