இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து காசாவில் 50,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு இன்று (23) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ள நிலையில், இன்னும் கடினமான நாட்கள் வரவிருக்கும் நிலையில், இது ஒரு மோசமான மைல்கல் எனவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள காசா சுகாதார அமைச்சு, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,021 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவில் உள்ள அதிகாரிகள் உயிரிழப்பு புள்ளிவிபரங்களை வெளியிடும் போது பொதுமக்களுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் வேறுபாடு காட்டுவதில்லை, ஆனால் சுகாதார அமைச்சும் ஐக்கிய நாடுகள் சபையும் இறப்புகளில் பெரும்பாலானவை பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறுகின்றன.
உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனவும், பல ஆயிரக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.