இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை தாம் மதிப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான அரசியலில் ஈடுபடும் உரிமையை மதிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தலவாக்கலை பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
“தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது.
தற்போதைய தலைமுறையினருக்காக மீண்டும் ஒருபோதும் போரை நடத்தாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுவோம்.
ஒரு நாடு முன்னேறுவதற்கு மிக முக்கியமான விடயம் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதாகும்.”
ஆனால் எங்களுக்கு நிலையற்ற பொருளாதாரம் இருந்தது. பொருளாதாரம் குறித்து பெரும் சந்தேகம் இருந்தது.
எனினும் எங்கள் நிர்வாகத்தின் போது, நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு இலங்கை மக்கள் ஒன்றுகூடி உற்சாகத்துடன் கொண்டாடிய ஆண்டாகும்.
மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு பழகி வருவதை நாம் காணலாம்.” என்றார்.