அரசியல்உள்நாடு

அரசாங்கம் டீசல் மின் நிலைய மாபியாவில் சிக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது – சஜித் பிரேமதாச

புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை விட நீர், காற்று, சூரிய சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மலிவானது.

தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என தேர்தல் காலத்தில் கூறியது.

ஆனால் இன்று டீசல் மாபியாவுக்கும், அனல் மின் மாபியாவுக்கும் அடிபணிந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து, அனுமதிகளை தாமதப்படுத்தி, டீசல் மின் உற்பத்தி நிலைய மாபியாவிற்கு இடம்கொடுத்து வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட தளுவாகொடுவ பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் இன்று (13) நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போது பெரும் சிரமத்துக்கும் அழுத்தத்திற்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

கற்பனைக்கு எட்டாத வகையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, மக்களின் வாழ்க்கை அழிந்து, அசௌகரியமும், மன அழுத்தமும் அதிகரித்து அன்றாட வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்ற பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

நல்ல உணவுகளைப் பெற்றுக் கொடுத்தல், குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துதல் ஆகியவையும் கடுமையான பிரச்சினைகளாக மாறிவிட்டன.

பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும், வாழ்க்கைச் செலவு அதிகரித்தாலும், மக்களைப் பலிகொடுத்து ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி அரசாங்கத்திற்கு மக்கள் படும் இன்னல்கள் புரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது அரிசி, தேங்காய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கூட அதிகரித்துள்ளதோடு, VAT வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. இவற்றுக்கு பதில்களும் இல்லை.

எடுக்கும் முயற்சிகளையும் காணவில்லை. இது குறித்து சபையில் கேள்வி எழுப்பினால் 76 வருடங்கள் குறித்து குறை கூறுகின்றனர்.

எங்களுக்கு தெரியும் என்றும் கூறுகின்றனர். அரசிற்கு தெளிவான கொள்கை இல்லாமையே இதற்கு முதற் காரணமாகும்.

மக்கள் தமது வருமான மூலங்களை இழந்துள்ளமையால் வறுமை அதிகரித்து வருகிறது. இந்த தருணத்தில் நாட்டில் வறுமை நிலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன், 33% ஆல் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம் என்றனர். எண்ணெய் விலையைக் குறைப்போம் என்றனர்.

இதில் நடந்து வரும் திருட்டு, ஊழல், மோசடிகளை ஒழிப்போம், இவற்றின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு சலுகை விலையில் தருவோம் என்றனர்.

ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. எடுக்கும் நடவடிக்கைகளையும் காணவில்லை. இதனால் விவசாயிகள், மீனவர்கள், தொழில் முனைவோர்கள் கூட நிர்க்கதிகளை முகம்கொடுத்து வருகின்றனர்.

பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.

வருமானங்கள் குறைந்துள்ள தருணத்தில், பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்

Related posts

Aeroflot விமான விவகாரம் : சட்டமா அதிபரால் மனு

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்