இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த விமானப் பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை பெற்ற 65 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
சந்தேக நபர் இன்றையதினம் அதிகாலை 12.45 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துள்ள நிலையில் விமானத்திற்குள் அதிக அளவு மதுபானம் அருந்தியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, விமானப் பணியாளர்கள் இது குறித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.