பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன, மேலும் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வௌிவந்திருந்தன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் இது தொடர்பாக கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்புடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அந்த அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், தேவைப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இருப்பினும், ஆளுங்கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பாக எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பொலிஸ் நிலைய மட்டத்தில் விசேட பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.