கேகாலை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலை மாணவன் ஒருவன் இனந்தெரியாத நபர்கள் சிலரால் தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த காணொளி கேகாலை , பிட்டிஹும பிரதேசத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை பிரதேசத்தில் வசிக்கும் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.