கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பல பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவை மீறி தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே நடைமுறையின் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், யாராவது அவர் தலைமறைவாக இருப்பதற்காக உதவி புரிவார்களானால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான முயற்சிகள் வழக்கத்தை விட அதிக முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.