ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்ற விசாரணையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் பதுங்கியிருந்த போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் சந்தேக நபர்களில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 20 ஆம் திகதி இரவு, பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ, மோகன்வத்த கடற்கரையில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அந்த நபரை முழங்காலில் நிற்க வைத்து, டி-56 துப்பாக்கியால் “டபுள் டேப்” முறையில் சுட்டு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சி சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.
பின்னர் துப்பாக்கிதாரி தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், உயிரிழந்தவர் 29 வயதுடையவர் எனவும், அயேஷ்காந்த போபேஆரச்சி என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் எனவும் கண்டறிந்துள்ளனர்.